நிமிர்ந்து நிற்கும் மலர்கள் வான் நோக்க தலைகுனிந்து மண்நோக்கும்
குவளை மலரிடமிருந்து
ஊதா வண்ணம் குழைத்துக் கொண்டான் !
நிறைந்து நிற்கும் விண்மீன்கள் நிலவுக்குத் துணை செல்ல தனித்திருக்கும்
இரவுவானிடமிருந்து
கருநீல வண்ணம் இரவல் வாங்கிக் கொண்டான் !
விரைந்து வரும் அலைகள் நுரைகளோடு கைகோத்துக் கொள்ள பரந்திருக்கும்
கடலிடமிருந்து
நீல வண்ணம் கடன் வாங்கிக் கொண்டான் !
விடியப் போகும் வேளையில் மரங்கள் பனிப்போர்த்தியிருக்க விழித்திருக்கும்
பசும்புல்லிடமிருந்து
பச்சை வண்ணம் பறித்துக் கொண்டான் !
தலை நிறைக்கும் பூக்களின் நடுவே தரை நிறைத்துக் கொண்டிருக்கும்
கொன்றைப்பூவிடமிருந்து
மஞ்சள் வண்ணம் கொள்ளைக் கொண்டான் !
இரவு முடிய காத்திருக்கும் பகலுக்கு முகம் மறைத்து பிரிவு சொல்லும்
அந்தி நேர சூரியனிடமிருந்து
செம்மஞ்சள் வண்ணம் அள்ளிக் கொண்டான் !
உலகம் காண கண்ணும் சுவாசிக்க நாசியும் திறந்துக் கொள்ள குழந்தையின்
திறவாக் கரங்களிலிருந்து
சிவப்பு வண்ணம் திருடிக் கொண்டான் !
களவாடிய வண்ணங்கள் கொண்டு மழைத் தூரிகையால்
வானச் சுவரில் வரைந்து விட்டான் வானவில் ஓவியம் !
ஓவியன் மட்டும் ஒளிந்துக் கொண்டான் !!!