July 24, 2014

காதலிக்கும் வரம்

தொலைதூரம் இருந்தோம்

இணையும் நாளெண்ணி ஏங்கினோம்

இன்றோ அருகருகே இருக்கிறோம்

ஒரே அறையில் இருக்கிறோம்

ஆனால் அவரவர் அலைபேசியில் லயித்திருக்கிறோம்....

இது திருமணம் தந்த மாற்றமோ ?

இல்லை நம் காதல் தந்த ஏமாற்றமோ ?

வாரம் ஒருமுறை சந்தித்தோம்

மணிக்கணக்கில் பேசினோம்

இன்றோ நொடிக்கொருமுறை சந்திக்கிறோம்

ஒரே வீட்டில் வசிக்கிறோம்

ஆனால் மணிக்கொருமுறைதன் சிரிக்கிறோம்...

இது மணவாழ்வு தந்த மாறுதலோ ?

இல்லை நம் சிநேகத்தில் வந்த குறைதலோ ?

நாம் மீண்டும் காதலர்களாக மாறிட வரம்தான் கிடைக்குமோ ?


June 27, 2014

அந்த நாள் ஞாபகம் !



அழகாய் நீ நடக்க , ஆடைத் தீண்டி நான் சிலிர்க்க


இனிமையாய்த் தொடங்கியது இன்றைய சந்திப்பு ...


ஏதேதோ பேச நினைத்திருக்க


உன் குறுஞ்சிரிப்பில் அத்தனையும் மறந்தேன்


அடிக்கடி நீ என்னை ரசித்திருக்க


நானோ உன் விழி வீச்சில் தொலைந்து போனேன்


பழரசம் நீ ருசித்திருக்க


உன்னையும் ஒரு கோப்பையில் ஊற்றி அருந்திட விழைந்தேன்


சாக்லேட் நீ சுவைத்திருக்க


நானும் அதுவாய் உன் கையில் மாறிவிட வேண்டிக்கொண்டேன்

என்று நிகழுமோ மீண்டும் நம் சந்திப்பு !!!!


காதலர்களாக .....

புள்ளியாய்.....

புள்ளியாய் எனக்குள் தொடங்கி வானமாய் விரிந்துவிட்ட உன் காதலில் நான் திளைத்து...

முதல் அழைப்பில் கோபிக்கிறேன்

இரண்டாம் அழைப்பில் உன்னைக் கோபித்ததால் எனையே வெறுக்கிறேன் ...

மூன்று நிமிடம் கூட உன்னை நினைக்க மறப்பதில்லை .. ஆனால்

நான்கு மணி நேரம் அலைபேசி அணைத்து வைக்கிறேன் ...

ஐம்புலன்களாலும் உன்னை அணைக்க ஏங்குகிறேன் ....சமயங்களில்

ஆறாம் அறிவிழந்து உன் மேல் ஊடிக் கலங்குகிறேன் ...சில நேரம்

ஏழு வண்ணக் கனவுகளில் உன்னுடன் இணைகிறேன் ...

இன்னும் ஏதேதோ உளறத் தோன்றுகிறது

ஆனால் அத்தனையும் உன் மேல் நான் கொண்ட அளவில்லா காதலால்

என்றென்றும் உன்னை பிரியாமல் இருக்கும் வரம் வேண்டி காத்திருக்கிறேன்.....

March 14, 2014

ஏனென்றால்... உன் பிறந்தநாள் !!!

இன்றுனக்கு பிறந்தநாள் ..

எனக்காகவே நீ பிறந்தநாள் ....

நம் இணைவிற்கு பின்னர் வரும் முதல் பிறந்தநாள் ....

சிலவற்றை தர முயற்சிக்கிறேன் .....

உனையே ரசித்திருக்க எண்ணி இயங்கமறுக்கும் என் இமைகள் .....

உனையே எப்பொழுதும் எதிர்பார்த்திருக்கும் என் விழிகள்.....

உனக்காக எனக்குள் துடித்துக் கொண்டிருக்கும் இதயம் ....

உன் ஸ்பரிசத்திற்காக ஏங்கியிருக்கும் என் விரல்கள் ....

உன் நெருக்கதிற்காக தவமிருக்கும் என் சுவாசம் ....

எனையே உனக்களித்துவிட்டேன் ... 

வேறென்ன கொடுப்பேநின்று .....

இவை அனைத்தையும் விட மிகச் சிறந்த என் காதல் கொடுக்கிறேன் ...

அதுவும் உன் காதலை விட சிறந்ததா என்று தெரியவில்லை....

ஆனாலும் கொடுக்கிறேன்...

February 7, 2014

காதல் மலர்ந்த நாள்

இரண்டேழில் பிறந்தாலும் ஏழிரண்டில் மீண்டும் பிறந்தேன் உன்னால் ....

இருவராய் இருந்தோம்

இருவருடம் முன்னால் இதே நாளில் சந்தித்தோம்

ஒருவருடம் முன்னாள் இருவரானோம்

இன்று நாம் மூவராகிவிட்டோம் ....

ஆனால் என் மீது நீ கொண்ட காதலும்

உன் மீது நான் கொண்ட காதலும்

இருவருடத்தில் இருநூறு மடங்காகிவிட்டது போல் உணர்கிறேன் ......

உன்னை முதன் முதலில் சந்தித்த நாளின்று...

காதலுடன் கடற்கரையில் கால் நனைத்து ...

உன் காதலில் நனைந்த நாளின்று....

எனக்குள் நீ காதலனாய் விழுந்த நாளின்று....

வார்த்தைகள் போதவில்லை இந்நாளைப் பற்றி வர்ணிக்க ....







January 27, 2014

காதல் மிகுதி

காதலிக்கும் பொழுதுகளில்  அலங்காரம் செய்து வந்து

உன் கருத்தை எதிர்கொண்டு நிற்பேன்....

பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சும்...

உனக்கு ரசனை குறைவென்று நினைப்பேன் ...

திருமணத்திற்கு பிறகு இன்று

காலை விழித்தவுடன் தூக்ககலக்கத்தில் அலங்காரமேதுமின்றி

உன்னருகில் வந்த பொழுது

"நீ அழகாய் இருக்கிறாய் "என்று கூறினாய்....

இரு வருட எதிர்பார்ப்பை ஒரு நொடியில் தந்தாய் ....

இன்றுதான் புரிகிறது

உனக்கு ரசனை குறைவு ஆனால் என் மீது காதல் மிகுதியென்று  ........