April 23, 2012

உணராக் காதல் !

உன் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது
அனைத்துத் தடங்களும் உபயோகத்தில் இருக்கிறதென்றால்
அனைத்து செல்களிலும் துயரம் வந்துத் தொற்றிக் கொள்ளும் !
உன் கைபேசி எண்ணை தட்டும் பொழுது
அணைத்து வைக்கப்படிருக்கிறது என்றால் உன் நினைவில்
அணைத்துக் கொள்வேன் என் கைபேசியை !
உன் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள நினைத்து
தவறான எண்ணுக்கு அழைத்துவிட்டால்
தவறாக அழுத்திய விரல்களைக் கோபிப்பேன் !
என் காதலை என் கைபேசி உணர்ந்த அளவேனும்
நீ உணர்வாயோ ?

April 14, 2012

முதல் நாளின்று !!!

உன் குரல் கேளாமல் ,
உன்னோடு சிற்றூடல் கொள்ளாமல்,
உனக்கு அலைவழி செய்திகள் அனுப்பாமல் ,
உன் எண்ணை விசைப் பலகையில் அழுத்தாமல்,
இந்த நாளொன்று நழுவிட
நானோ முன்னை விட உன்னை வெகுவாய் விரும்புகிறேன் !!!

April 4, 2012

உன்னருகில் !!!


பக்கம் பக்கமாய் கவிதைகள் உமிழும் மனம்
பக்கம் நீயிருக்கையில் அக்கம்பக்கம் மறக்கும்
பொறிகளின் வேகம் மிஞ்சும் மூளை உன்னருகில்
பொறிகளைந்தும் திசைவேறாய்ச் சிதறச் செய்யும்
வலம் தவறி இடமிருக்கும் இதயம் உன்னை
வலம் வந்து துடிப்புகள் தவற விடும்
பிழையின்றி உதிரும் சொற்கள் உன்னெதிர் தோற்று
பிழைக்க இடம் தேடி மீண்டும் வளை புகும்
விடையில்லா வினாவெல்லாம் உன் விழிவீச்சில்
விடைப் பெற்றுத் தொலையும் !!!

April 1, 2012

கோபம் !!!

உன் பயணப்பையின் மீது ஆராக் கோபம்
எப்பொழுதும் உன் தோள்களில் தொற்றிக் கொள்கிறதே !!!
உன் மடிக்கணினியின் மீது பொய்க் கோபம்
எந்நேரமும் என்னிடங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறதே !!!
உன் கைப்பேசியின் மீது தீராக் கோபம்
எனக்கான உன் முத்தங்களை முதலில் சுவைக்கிறதே !!!
உன் தலையணை மீது செல்லக் கோபம்
எனைப்பற்றி தூக்கத்தில் நீ உளற ஒட்டுக் கேட்கிறதே !!!
உன் தொடுதிரையின் மீது கடுங் கோபம்
எனைவிட அதிகமாய் உன் தீண்டல் பெறுகிறதே !!!
உன் கைக்கடிகாரத்தின் மீது சிறு கோபம்
என்வசம் நீயிருக்கையில் நேரத்தை நினைவூட்டுதே !!!
ஒவ்வொருமுறை கோபிக்கும் பொழுதும் 
முத்தமொன்று நீ பரிசளிப்பதால் 
கோபத்தின் எண்ணிக்கை முடிவிலியாய் நீள்கிறது !!!