June 23, 2011

வானப் பறவை !!!


என் கனவைக் கலைத்துச் சென்ற பறவை ....

என் நினைவை உலுக்கிச் சென்ற பறவை ....

என் மனதை உடைத்துச் சென்ற பறவை....

என் காதலைக் கடத்திச் சென்ற பறவை ....

ஆனாலும் அந்த பறவையை நேசிக்கிறேன் ....

அவனை சுமந்து செல்வதால் ....!!!

June 21, 2011

விசித்திர உலகம்

நீ விதைத்ததோ காதல் ...

நான் வளர்த்ததோ கவிதை ...

நமக்கு விளைந்ததோ பிரிவு ...

June 15, 2011

கோடை மழை

குளிர்கால காலையில் வெந்நீர் குளியல் முடித்து

நீ சிறு புன்னகையுடன் தலை சிலிர்க்கும் பொழுது

என் மீது சிதறும் துளிகளாக எண்ணிக் கொண்டு

கோடைக் கால குளிர்மழைத் துளிகளில்

குடை விடுத்து நடந்தேன்...நேற்று ...

மழை விட்டதும் மறைந்துவிட்டது மண்ணின் ஈரம் ....

ஆனால் உன் நினைவுகளால் விழிகளில் ஈரம்.....

இன்னும் மாறாமல் .....

June 12, 2011

தொலைந்த ரசனை !!!

உன் பார்வைகளையெல்லாம் ரசித்தேன்
நீ என்னைப் பார்க்கத்தவறினாய்... வெறுத்தேன்!!
உன் பொய்களையெல்லாம் ரசித்தேன்
நீ என்னிடமே பொய்யுரைத்தாய் ...விலகினேன்!!
உன் கனவுகளையெல்லாம் ரசித்தேன்
நீயே கனவாகிப் போனாய் ... மறந்தேன்!!

June 2, 2011

தோழி !!! நீ வாழி !!!

உன் வண்ணக்கனவுகளைச் சுமந்திட்ட இரவுகள் மட்டுமே முடிகிறது இன்று ....

உன் எண்ணங்கள் உயர்ந்திட விரியட்டும் வானம் என்றும் ...

உன் அருகாமையை உணர்ந்திட்ட நாழிகைகள் மட்டுமே முடிகிறது இன்று ....

உன் நினைவுகளைத் தீண்டும் நேரங்கள் நீளட்டும் என்றும் ...

உன் நட்பின் ஆழத்தால் உருவான பாதைகள் மட்டுமே மாறுகிறது இன்று .....

உன் உள்ளத்தோடு கொண்ட பயணம் தொடரட்டும் என்றும் ...

தொய்வுற்றபோழுதுகளில் தோள் சேர்த்துக் கொண்ட தோழியே ....

உன் தொலைதூரப் பயணத்திற்கு பிரியாவிடையளிக்கிறேன் .....