July 27, 2020

பெருங்கொடையே !

வார்த்தைகளை வரையறையோடு விடுவிக்கிறாய் !

வாசனைகளையும் வடிகட்டி என்னுள் சேர்க்கிறாய் !

என் புன்னகைகளை பிறர் ரசிக்க நீ விடுவதில்லை 

நான் தனித்திருப்பதை தவிர்க்க 

உனை நான் நீங்குவதுமில்லை !

உதடு பொருத்தினாய்
 
கன்னம் தழுவினாய்

காதுமடல் வரை நீள்கிறாய் ! 

என் காதலனின் குணமனைத்தும் உனக்கும் இருப்பதால்

உன்னையும் காதலிக்க தொடங்கிவிட்டேன் !

கொரோனா கொடுத்த பெருங்கொடையே - என் முகக்கவசமே !


July 24, 2020

ஒட்டடை


விட்டத்தின் தனிமையை தணிக்க வந்தாயோ ?

வீட்டின் வெறுமையை விலக்க வந்தாயோ ?

எட்டுகால்களினால் செதுக்கப்பட்ட  எட்டாச் சிற்பமோ ?

எட்டிப் பிடிக்க ஒற்றைக்கோல் வேண்டுமோ ?

ஒட்டி உறவாட உயரம்தான் விருப்பமோ ?

"ஒட்டடை உனக்கும் என் மீது காதலோ ?

அடிக்கடிதோன்றி இம்சிக்கிறாயே !!!"

January 23, 2019

அவள் - குறுகத் தரித்த குறள்

அணு ஆயுதங்கள் தேவையில்லை - அவளின்

               அழுகை போதும் என்னைத் துகள்களாக்க !

அனுசரணைகள் தேவையில்லை - அவளின்

                அழைப்பு போதும் என்னைக் குழைவாக்க !

அனுதினமும் பூச முகப்பூச்சு தேவையில்லை - அவளின்

                 அரைகுறை  முத்தம் போதும் என்னை சிவப்பாக்க !

அனுகூலம் தரும் உறவுகள் தேவையில்லை - அவளின்

                  அம்மா எனும் குரல்  போதும் என்னை மகிழ்விக்க !

அனுபவம் பெற்ற ஆசான் தேவையில்லை -அவளின்

                  அசாதாரண கேள்விகள் போதும் என்னை சிறப்பாக்க !

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி

குறுகத் தரித்தது குறள் மட்டுமல்ல அவளும்தான் !!!

என்னை மகிழ்விக்கும் மகள் !!!


April 13, 2018

ஆயுதப்படை !

உன் விழியென்ன அகழியோ ? - என்னை

உன் பார்வை முதலைகள் முழுதாக விழுங்குகின்றனவே !

உன் வாசமென்ன நீர்மூழ்கியோ ? - என்

நினைவுக்கடலில் நுழைந்து போர் புரிகிறதே !

உன் குரலென்ன போர்விமானமோ   ? - என்

உறங்கா இரவில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறதே !

உன் விரலென்ன அணுஆயுதமோ ?- என்

நாணக் குவியல்களை சிதறச் செய்கிறதே !

உன் சுவாசமென்ன ரசாயன ஆயுதமோ ?- என்

உடலினுள் வேதியியல் மாற்றம் நிகழ்த்துகிறதே !




March 7, 2018

மகளிர் !

ழகாக்கி அழகுபார்த்தாள் பாட்டி  !

ளுமைகள்அறிவித்தாள் ஆசிரியை !

னிமையாக்கினாள்  இளைய தங்கை  !

ன்றெடுக்கும் வரம் தந்தாள் மகள் !

தவிகள் செய்தாள் உடன்பிறந்தவள் !

க்கம் ஊட்டினாள்  அக்கா  !

திர்க்கக் கற்றுகொடுத்தாள் சித்தி  !

னென்று கேட்க சொல்லிக்கொடுத்தாள் தோழி !

யங்கள் விளக்கினாள்  அத்தை !

ற்றுமையை உணர்த்தினாள் மாமியார் !

யாமல் உழைத்தாள் அம்மா !

உயிர்பெற்றது முதல் என் உடனிருக்கும் பெண்களுக்கும்

மாதவம் புரிந்து மங்கையராய் மலர்ந்த அனைவருக்கும்

மகளிர்  தின வாழ்த்துக்கள் !